districts

img

பொதுக் கழிப்பறைக்குள் தஞ்சம்: இருளர் குடும்பத்தை மீட்டெடுத்தது சிபிஎம்!

திருவண்ணாமலை,பிப்.11- கடந்த 2 ஆண்டு காலமாக பொதுக் கழிப்பறைக்குள் வசித்து வந்த இருளர் இனத்தை சேர்ந்த குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள சளுக்கை, பாதிரி, மங்கநல்லூர், பாஞ்சரை, நமண்டி, சத்தியவாடி,மாவலவாடி, தெள்ளூர் கிராமங்களில் இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பல்லாண்டு காலமாக இந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை என்று எதுவும் வழங்கவில்லை. மேலும், நிரந்தரமாக வசிப்பதற்கான மனைப் பட்டாவும் வழங்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக் கருவிகளான மேள, தாளம் முழங்க கடந்த ஆண்டு நவம்பர் 29 அன்று வந்தவாசி கோட்டையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர், சிபிஎம் வட்டச் செயலாளர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் தலை மையில் ஒரு குழு சளுக்கை கிராமம் அண்ணா நகருக்கு சென்றது. அங்கு தினகரன்-பொன்னியம்மாள் தம்பதி கைக்குழந்தையுடன், பொது சுகாதாரத்துறை கட்டிய கழிப்பறைக்குள் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது தெரிய வந்தது. இதற்கு காரணம், தினகரன்-பொன்னியம்மாள் வசித்து வந்த குடிசை, 2 ஆண்டுகளுக்கு முன்பு மழை-வெள்ளத்தில் சேத மடைந்துள்ளது. இதனால் வசிப்ப தற்கு வழியில்லாமல் தவித்துள்ளனர். பிறகு, அருகில் இருந்த பொது கழிவறைக்குள் தஞ்சம் புகுந்தனர். பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சி யால், சளுக்கை கிராமத்திற்கு சனிக்கிழமையன்று (பிப்.10) வருகை வந்த வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தசரதன், ராஜன்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பொதுக் கழிப்பறைக்குள் வசித்து வந்த பழங்குடியின குடும்பத்தை மீட்டெடுத்தது, தற்காலிமாக மாற்று அரசு இ-சேவை மையத்தின் ஒரு பகுதியில் தங்க வைத்தனர். ஒரு மாதத்திற்குள் அந்த குடும்பத்திற்கு தொகுப்பு வீடு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த நிகழ்வின்போது, சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர், யாசர் அராபத், சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.