சென்னை, அக். 21 - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு களை புதுப்பித்து கட்டும் போது, பங்களிப்பு தொகை இன்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். குடிசை பகுதி மக்களுக்கு அதேஇடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட 24வது மாநாடு அக்.19-20 தேதிகளில் அயனாவரத்தில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டை நிறைவு செய்து மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகையில், “இடதுசாரி சக்திகள் வலுப்பெறாமல் வகுப்புவாத சக்திகளை, பொருளாதாரச் சுரண்டலை தடுக்க முடியாது. இடது சாரி ஜனநாயக அணியின் கீழ் உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும். மத, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறவர்கள், மனித உரிமை ஆர்வலர் கள், அமைப்புகள், அறிவு ஜீவிகள், இதர முற்போக்கு சக்திகளையும் ஓர் அணியில் கொண்டு வரவேண்டும் என்றார். வகுப்புவாதத்திற்கு எதி ராக ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவோம். அதேசமயம் அத்தகைய சக்திகளின் வர்க்க சுரண்டலை கடுமையாக எதிர்ப்போம். சென்னை நகரின் அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை வலுவாக நடத்துவோம். சோசலிச அமைப்பை கொண்டு வருவதற்கான பணிகளை தொடர்வோம் என்றும் அவர் கூறினார். தீர்மானங்கள் இந்த மாநாட்டில், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி களை மூடுவதை கைவிட வேண்டும். துறைமுகம் சட்ட மன்ற தொகுதியில் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும். தெரு வோர வியாபாரிகளை பாதுகாக்கும் நடவடிக்கை களை மாநகராட்சி எடுக்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றாமல், நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்; அரசாணைப்படி குடியிருக்கும் இடத்தை குடி யிருப்போருக்கே சொந்த மாக்க வேண்டும், மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், உள்ளாட்சி பணிகளை அவுட்சோர்சிங் செய்யும் அரசாணை 152ஐ ரத்து செய்து வேண்டும், அரசுத்துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றும் தூய்மைப் பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஐசிஎப் தொழிற்சாலை தனியார்மயமாக்கலை கைவிட்டு, காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், காவல்துறை, சமூக விரோதிகளின் கள்ளக் கூட்டணியோடு போதைப் பொருள் விற்பதை தடுக்க வேண்டும், கல்வி நிலையங்களுக்கு அரு காமையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.