districts

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி: குடியிருப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சென்னை, டிச. 20- சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி, 74ஆவது வட்டத்தில், டேங்க் ஃபண்ட் ரோடு, ராஜீவ்காந்தி நகர், ஏகாங்கி புரம், சேமாத்தம்மன் காலனி ஆகிய இடங்களில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 940 குடும்பங்கள் வசிக்கின்றன.  கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு முதல மைச்சரை சந்தித்து ரயில்வேயிடம் இருந்து மேற்படி நிலத்தை கையகப்படுத்தி குடியிருப்பை பாதுகாக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. மேற்படி மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழக முதல்வரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் நியூ டேங்க் ஃபண்ட் ரோடு மற்றும் ராஜீவ்காந்தி நகரில் வீடுகளை அப்புறப்படுத்த உள்ளதாகவும், அதற்கு காவல்துறை யினரின் பாதுகாப்பு கோரி பெருநகர காவல் இணை ஆணையரிடம் (வடக்கு) கடிதம் அளித்திருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கார்த்திஷ் குமார், திருவிக நகர் பகுதிச் செயலாளர்  வி.செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.தேவி, பகுதிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, சுரேஷ், வினோத் ஆகியோர் இங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் அப்புறப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அப்புறப்படுத்தும் நடவடிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் தற்காலிகமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைத்தனர். தற்போது மீண்டும் குடியிருப்புகளை அகற்ற முயற்சிக்கின்றனர்.