கடலூர், மே 6- திருப்பாபுலியூர், முதுநகர் துறைமுகம் சந்திப்பில் அனைத்து ரயில்களும் நின்று செல்லக் கோரியும், அடிப்படை வசதி கள் நிறைவேற்ற கோரியும், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மனிஷ் அகர்வாலி டம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், குடியிருப்போர் சங்க தலைவர் பி.வெங்கடேசன், துணை செயலாளர் தேவநாதன், ரங்கநாதன், பாலு பச்சையப்பன், கடலூ மாநகர அனைத்து பொதுநல அமைப்பு தலைவர் எஸ்.என்.கே.ரவி, செயலாளர் குரு ராமலிங்கம், மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அதில் கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பின் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருப்பதி வண்டிகளும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். கன்னியாகுமரி புதுச்சேரி மஹால் எக்ஸ்பிரஸ், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். சேலம் விருத்தாசலம் விரைவு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை இருந்து மைசூருக்கு இயக்கப்படும்விரைவு ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்கவும் விழுப்புரம் தாம்பரம் பயணிகள் ரயில் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி சென்னை ராக்போர்ட் விரைவு ரயில் வழி தடம் மாற்றி விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் வழியாக இயக்க வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் முழுவதும் மேல் கூரை வசதி, குடிநீர், கழிப்பிடம், பயணிகள் தங்கும் அறை, மாற்றுத்திறனாளி கள் முதியவர்கள் எளியதாக வந்து செல்வதற்கு வசதிகள், கடலூர் துறைமுக சந்திப்பில் கூரை வசதி சைக்கிள் ஸ்டாண்ட் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.