districts

வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணி

மீஞ்சூர், ஜூன் 17-

    அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கன மழையால் வெள்ள  நீர் ஊருக்குள் புகாமல்  பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வல்லூர் கொண்டக் கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயில்  சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர்  ஊருக்குள் புகுந்து பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டுவருகின்றனர்.

   இந்நிலையில் அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல்  இருக்க சமூக மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இந்த தடுப்பு சுவர் 50  அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால் 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.  

   நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும். தூர்வாரி ஆழப்படுத்த  வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள்  சென்றுவிட்டனர்.