districts

வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு

காஞ்சிபுரம்,மே 27-  

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள்கோவில் உள்ளிட்ட பல்வேறுகோவில்கள் உள்ளன.  

     தினந்தோறும்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவில்கள் அருகே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்போது வாகனங்களை நிறுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் பக்தர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கோவில்கள் அருகேயே பக்தர்களின் வாகனங்களை தனியாக நிறுத்த இடம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இடங்களை தேர்வு செய்தனர். இதன்மூலம் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சிதெரிவித்துள்ளனர்.