districts

சென்னை மாவட்ட அளவில் மாணவர்களுக்கு கலைப்போட்டிகள்

சென்னை, ஆக.8-

    கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப் பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல்  16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு, கலைப்  பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  

    சிறுவர்களிடையே மறைந்து கிடக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை மற்றும் ஓவியம் ஆகிய நான்கு  கலைப் பிரிவுகளிலும், 5-8, 9-12, 13-16  வயதுப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப் படுகின்றன. அவற்றில் முதல் பரிசு பெற்ற வர்களிடையே 9-12, 13-16 மாநில அளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.  

    சென்னை மாவட்ட அளவில் 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறுவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. அவ்வகையில், முதற்கட்டமாக 5-8, 9-12,  13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில்  சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வருகிற 12-ந்தேதி பரத நாட்டி யம், கிராமிய நடனம் மற்றும் குரலிசை ஆகிய கலைப் போட்டிகளும் மற்றும் 13-ந்தேதி ஓவிய கலைப் போட்டியும் நடைபெற உள்ளன.  

    கலைப் போட்டிகள் அனைத்தும் சென்னை-28, ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளா கத்தில் நடைபெற உள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவர்களின்  பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறப்பு சான்றிதழ் கொண்டு வரவேண்டும். பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய கலை போட்டிகள் 5-8, 9-12 வயது  பிரிவு மாணவ, மாணவியருக்கு காலை 9.30  மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும்,  13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு  பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி  வரையிலும் நடைெபறும். ஓவியப் போட்டி கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.