districts

சென்னையின் வளர்ச்சி தறி கெட்டு நிற்பதற்கு காரணம் என்ன

     பெரிய பெரிய திட்டங்களும், பணி களும் சென்னையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சென்னையின் வளர்ச்சி தறி கெட்டு தடம் புரண்டு நிற்கிறதே, இதற்கு காரணம் என்ன?

     வறுமையில் சிக்கி வாழ விரும்பிய கிராம மக்கள் குறைந்த கூலிக்கு உழைப்பை விற்க சென்னைக்குள் நுழை வது நகரமயமாதல் என்றால், மலிவான விலையில் உழைப்பை வாங்கி லாபம் பெருக்கத் துடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் சென்னைக்குள் குவிவது உலகமயமாதல்.

      தற்போதைய நவீன உலகமய போட்டி யில் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட சந்தைக்கும், நகர கட்டமைப்பு திட்டங் களை உருவாக்கி அமல்படுத்த வேண்டிய  அரசுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உள்ளது. எப்படிப்பட்ட நகர வளர்ச்சி அமைய வேண்டும்? அரசின் நிதி எதற்கு, எப்படி, எங்கே செலவு செய்ய வேண்டும்? என்பதை தீர்மானிப்பது அரசாங்கமும், மாநகராட்சியும் அல்ல. கார்ப்பரேட் சந்தை நிறுவனங்கள்தான்.  இதனால் மக்களின் நலன்களும், தேவை களும் பின்னுக்கு செல்கின்றன. குடியிருப்பு நெருக்கடி, குடிநீர் தரமின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடு என்று சென்னை மக்களின் வாழும் சூழல் கேள்விக்குள்ளாகும்போது, ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நகர வளர்ச்சி திட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புவதில்லை. இந்த நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு. எனவே  அரசு நிர்வாகமும் உழைக்கும் மக்களை மையப்படுத்திய நகர வளர்ச்சி திட்டத்தில் ஆர்வம் காட்டு வதில்லை. எனவேதான் சென்னை மக்களின் அடிப்படை தேவைகளை தொலைநோக்கு திட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக, அவ்வப்போது முன்னுக்கு வரும் தேவைகளை தீர்க்கக் கூடிய தற்காலிக திட்டங்களில் மட்டுமே அரசாங்கமும், சென்னை மாநகராட்சியும் கவனம் செலுத்துகின்றன.

      பெரும் நிறுவனங்களுக்கு அனு சரணையான அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். 2013இல் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் 10 வருடங்களை கடக்கப்  போகிறது. இந்த திட்டம் சென்னையை ஸ்மார்ட்டாக மாற்றியதா?, சென்னை ஸ்மார்ட் சிட்டிக்காக ஒன்றிய அரசின்  சார்பில் ரூ. 500 கோடியும், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.500 கோடியும்  ஒதுக்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்திற்காக முதலீடு செய்யப்படும் மொத்த தொகையில் 75 விழுக்காட்டிற்கு மேல் கடன் வாங்கியே செலவழிக்கப்படு கிறது.

   கடன் கொடுக்கும் நிறுவனங்கள் நமது  நகரத்தின் அடிப்படை தேவைகளுக்கு சம்பந்தம் இல்லாத, பொருந்தாத திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கின்றன. இந்த  நிபந்த னைகளை ஏற்றுக் கொண்டுதான் அரசு கடன் வாங்குகிறது. இப்போது நம்முடைய கேள்வி எல்லாம் ஸ்மார்ட் சிட்டி என்றால் அரசு  என்னவெல்லாம் செய்யப் போகிறது, எவ்வளவு முதலீடு செய்யப் போகிறது?  அதில் எவ்வளவு கடன் வாங்குகிறது,

     எந்த நாட்டுடன் கடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது, எத்தனை ஆண்டு களில் கடனை திருப்பி செலுத்தப் போகிறது? என்னென்ன நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது?  என்பதை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் நலன்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்கிக் கொண்டு இருப்பது வெளிச்சத் திற்கு வரும்.

கார்ப்பரேட் ஸ்டைல் திட்டம் சென்னைக்கு பயன்படுமா?

    சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நகர்த்திக் கொண்டு போவதற்கு ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தையும், நதிநீர் சீரமைப்பு திட்டத்தையும் முன்னெடுத்து அமலாக்க பெரிய நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. சென்னை பெருநகர வளர்ச்சி திட்டங்கள் மேலோட்டமாக வடிவமைக்கப்படுவதற்கும், பின்ன டைந்து கிடப்பதற்கும் பெரும் நிறுவனங்களின் விருப்பப்படி அரசு செயல்படுவதே காரணமாகும். பெரும்  பகுதி மக்களின் விருப்பத்தின் அடிப் படையில் இனி வரும். காலங்களிலாவது வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அடிப்படை தேவைகளுக்கு  அரசு முகம் கொடுக்குமா?

    குடும்பங்களின் வளர்ச்சி, குடியிருப்புகளின் தேவைகளை மதிப்பீடு செய்த சிஎம்டிஏ 2026ல் 13 லட்சம் வீடுகள் சென்னை மக்களுக்கு தேவை என்று குறிப்பிடுகிறது. குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடுதல் தளங்களை உருவாக்குவதால் மட்டுமே அனைவருக்கும் வீடு வழங்குவது சாத்திய மாகாது. நகரின் கட்டமைப்பு வளர்ச்சி  திட்டங்களின் அடிப்படை கூறாக,  அனைத்து வகையான குடியிருப்புகளை யும் வகைப்படுத்தி மக்களுக்கு சொந்த மாக்குவதை முதன்மை பணியாக அரசு செய்ய வேண்டும்.

     சிஎம்டிஏ மதிப்பீட்டின்படி 2026ல் சென்னை பெருநகரில் 15 வயது  முதல் 60 வயது வரை உள்ள வேலை செய்ய தகுதி படைத்தோர் 87 லட்சம் பேராகும். இந்த மதிப்பீட்டின்படி பார்த்தால் புதிதாக 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று சிஎம்டிஏ கூறுகிறது. தற்போதைய புள்ளி விவரப்படி வேலை செய்ய தகுதி  உள்ளோரில் வேலை இல்லாமல் இருப்ப வர்கள் 48.43 விழுக்காடாகும். சரி  பாதி பேருக்கு வேலை தர முடியாத  பெருநகரமாக சென்னை பின்னடைந்து கிடக்கிறது. சிறு குறுந்தொழில் களை பாதுகாத்து வளர்த்தெடுப்பதுடன், அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் தனியார்  கம்பெனிகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள் முறையை கைவிட்டு ஒரு கவுரவமான வேலையையும், சம்பளத்தையும்   உத்தரவாதப்படுத்திட அரசு முயற்சிப்பது அவசியமாகிறது. அதேபோன்று நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் அமல்படுத்துவதுடன், ஓராண்டில் 200 நாட்கள் வேலை உத்தரவாதத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

     வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த படிப்புக்கேற்ற பாதுகாப்பான வேலையும், வாழ்க்கை நடத்த தேவையான சம்பளத்தையும், சமூக பாதுகாப்பையும் அளிப்பதே வளர்ச்சியாகும்.

     சென்னையில் மையமாக இருந்த  சட்டக் கல்லூரி இடமாற்றம் செய்யப் பட்டது. சென்னை  மாணவர்கள் சட்டம் பயில வடசென்னையில் ஒரு சட்டக்  கல்லூரி துவங்கிட வேண்டும். அதே போன்று அம்பத்தூர், மாதவரம், திருவிக  நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி களை புதிதாக துவக்க வேண்டும். அரசு பள்ளிகளின் கட்டிடம், பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் திறன், போதுமான ஆசிரியர்களின் எண்ணிக்கை என தேவை யான மாற்றத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். மாற்றம் என்ற பெயரில்