சென்னை, மார்ச் 29 - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதனன்று (மார்ச் 29) அண்ணாசாலை எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக்காடு வரையறை இன்றி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு நடைமுறையைப் போன்று, அதே கால அளவில் ஓய்வூதியத்தையும் திருத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுக்காப்பீட்டு நிறுவனத்தில் கூட்டு போராட்டக்குழு வேலை நிறுத்தம் செய்தது. டெல்லியில் அகில இந்திய காப்பீடு ஓய்வூதியர் சங்கம் தர்ணா போராட்டம் நடத்தியது. இதனையொட்டி நாடு முழுவதும் எல்ஐசி அலுவலகங்களில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. இதனையொட்டி காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை பகுதி 1ன் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை தாங்கினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் டி.செந்தில்குமார், சென்னை பகுதி- 1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், ஓய்வூதியர் சங்கத் தலைவர் நரசிம்மராவ் உள்ளிட்டோர் பேசினர். சென்னை பகுதி-2ன் சார்பில் அண்ணா நகர் கோட்ட அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.சந்தானம், பகுதி-2ன் பொதுச் செயலா ளர் சர்வமங்களா உள்ளிட்டோர் பேசினர்.