சென்னை, நவ. 16- மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கல்வெட்டு மைப்படிகள் மீண்டும் தமிழகம் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் மைப்படிகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் தற்போது 13,000 தமிழக கல்வெட்டுகளின் மைப்படிகள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் சுமார் 26 ஆயிரம் மைப்படிகளில் மீதம் இருக்கக்கூடிய தமிழ் கல்வெட்டு மைப்படிகளை ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா விரைவில் அனுப்பி வைக்க உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்பு கல்வெட்டு மைப்படிகள் கிடைத்துள்ள நிலையில், தமிழக வரலாற்றில் ஆய்வு செய்யும் அனைவருக்கும் இது மகிழ்ச்சிகரமான நாளாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தொல் பொருட்களையும் தமிழகம் கொண்டு வருவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வு வைப்பகம் திறப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது, அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை எங்கு வைக்கலாம், எவ்வாறு காட்சிப்படுத்தலாம் என்பதை தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடிந்து முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று அமைச்சர் கூறினார். கொற்கையை தொடர்ந்து கடல்சார் அகழாய்வில் அழகன்குளம் மற்றும் முசிறியில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.