districts

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான பட்ஜெட்: டாக்ட் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை, பிப். 2- ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிக ளுக்குமான பட்ஜெட் என தமிழ்நாடு கைத்தொழில் குறுந்தொழில் சங்கம் (டாக்ட் சங்கம்) குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் செய்து உள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூண்களாக இருந்து வரும் சிறு குறுந்தொழில்களுக்கான அறிவிப்பில் பெரிய அளவில் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. 10 லட்ச ரூபாய் வரை  தனி மனித வருவாய்க்கு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரை வரி விலக்கு மற்றும்  தனி மனித வருமான வரி 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தி இருப்பதை வரவேற்கிறோம். சிறு குறுந்தொழில்களுக்கு வங்கியில் வழங்கப்படும் கடன்களுக்கு ரூ 9  ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள 25 லட்சம் சிறு குறுந்தொழில் நிறுவனங்க ளும் அதில் பணிபுரியும் 15 கோடி தொழி லாளர்கள் அடங்கிய ஒரு துறைக்கு அது போதுமானதாக இல்லை. மேலும், இந்த பட்ஜெட் என்பது சிறு  குறுந் தொழில்களுக்கு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லை. சிறு குறுந் தொழில்க ளுக்கான கடன் வழங்குவதில் வட்டி குறைப்பு அறிவிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரியில் சிறு குறுந் தொழில்களுக்கு உள்ள அதிகப்பட்சம் 18 விழுக்காடு என்பதை  குறைப்பதற்கான நடவடிக்கையும் இல்லை.  சிறு குறுந் தொழில்களுக்கான தனி அமைச்சகம் மூலப்பொருள் விலை நிர்ணய  கமிட்டி, ஜாப் ஆர்டர் விலை நிர்ணய கமிட்டி  போன்றவை குறித்த அறிவிப்பும் இல்லை. 2020 முதல் 2022 வரை ஏற்பட்ட தொழில் நெருக்கடியில் இருந்து சிறு குறுந்தொழில்கள் மீண்டுவர வங்கியில் கடன் பெற்ற சிறு குறுந் தொழில் முனை வோர்களுக்கான அபராத வட்டி மற்றும் கொரோனா காலத்திற்கான வட்டி தள்ளுபடி  போன்ற அறிவிப்புகளும் இல்லை. பொதுவாக இந்த பட்ஜெட்டில் சிறு குறுந்தொழில் வளர்ச்சிக்கான எந்தவித கவனமும் செலுத்தப்படவில்லை. மாறாக கார்பெரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்குமான பட்ஜெட் என்று கருதுகிறோம். ஒட்டுமொத்தமாக சிறு குறுந்தொழில்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.