கடலூர், செப்.27- பெரியார் கலைக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் அலகு சார்பில் நூல் வெளியீட்டு விழா, கல்வி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலகின் பொறுப்பு அலுவலரும், உதவி பேராசிரியருமான ஜா.ராஜா வரவேற்றார். பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ரா.ராஜேந்திரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் பா. கீதா, கணினி அறிவியல் துறை தலைவர் க.கீதா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உரை யாற்றினார். வினையாலணையும் பெயர்கள் நூலினை ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை புதுதில்லி கவிஞர் பிரம்ம நாயகம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் ராம கிருஷ்ணன் சாந்தி, நிர்மல் குமார், சிவகாமசுந்தரி, சுகி கணேஷ் குமார், மதியழகன், தமுஎகச மாவட்ட செயலாளர் பால்கி, நெய்வேலி என்எல்சி சிஐடியு சங்கத்தின் இரா. பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் தமிழ் இயலன் ஏற்புரை நிகழ்த்தினார். இணை பேராசிரியர் து.வேணி நன்றி கூறினார்.