districts

பேரவை நிகழ்ச்சி செல்போனில் பதிவு: உரிமைக்குழு விசாரணை

சென்னை,ஜன.25- சட்டப்பேரவையின் அவை உரிமைக்குழு கூட்டம் புதனன்று (ஜன.25) பேரவை துணைத்தலைவரும், உரிமைக்குழுவின் தலைவருமான கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது.  கடந்த 9 ஆம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியபோது அங்குள்ள விருந்தினர் மாடத்தில் அமர்ந்திருந்த ஒருவர் அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார் என்றும் இதில் அவை உரிமை மீறல் உள்ளதாகவும் இந்த பிரச்சினையை அவை உரிமைக் குழு வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.  படம் பிடித்தவர் மீது, அவை காவலர் ராஜனிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்ததாகவும், பேரவை விதிகளின்படி இது தவறானதாகும் என்றும், எனவே அவை உரிமை மீறல் குழுவினருக்கு அனுப்பி தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபா நாயகருக்கு கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சினையில் மேலெழுந்த வாரியாக பார்க்கையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை குழுவிற்கு உத்தரவிடப்படுகிறது என்று பதிலளித்தார்.  இந்நிலையில் அவை உரிமை குழு, கூடியது. குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், சவுந்தரபாண்டி, நல்லதம்பி, ஈஸ்வரப்பன், பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.