சென்னை, மார்ச் 25 - மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிபிடி) அடிப்படை வசதி கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணியில் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் பழுதடைந்த சுவர் இடிந்து மார்ச் 1 அன்று 3 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், கல்லூரியில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு குடிநீர் தொட்டி வைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், உணவு விடுதியில் உட்காரும் வசதியை ஏற்படுத்த வேண்டும், செய்முறை பயிற்சி கூடங்களை சீரமைக்க வேண்டும், விடுதியில் தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முதல்வர் சீனிவாசனிடம் மாணவர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக மாணவர் சங்கம், முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பியது. இதனால் கல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இதையடுத்து சனிக்கிழமை யன்று (மார்ச் 25) கல்லூரி மீண்டும் திறக்கப் பட்டது. கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரி முதல்வர், குடிநீர் வாரிய அதிகாரிகள், மாணவர் சங்க தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த், செயலாளர் பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்வேதா உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினர். அப்போது, குடிநீர் சுத்திகரிப்பு (ஆர்ஓ பிளாண்ட்) எந்திரம் உடனடியாக பொருத்தப்படும் என்று உறுதி அளித்த னர். மேலும், கல்லூரியின் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.