சென்னை, மே 27 -
முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ராஜீவ்காந்தி நகர் மக்களுக்கு குடிமனைப்பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவர் நாகை மாலி தெரி வித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி, புலிக்கொரடு கிராமத்தில் ராஜீவ்காந்திநகர் உள்ளது. 2.33 ஏக்கர் (சர்வேஎண்.113ல் ) நிலத்தில் 4 தலைமுறைகளாக 102 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இந்த மக்களை வனத்துறை அப்பகுதியிலிருந்து அகற்ற முயற்சிக்கும் போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி தடுத்து வருகிறது.
2006 ஆம் ஆண்டு முதல் வரு வாய்த்துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இதனையடுத்து, 2015ம் ஆண்டு வன நிலத்திற்கு ஈடாக செங்கல்பட்டு அருகே வேதநாராயணபுரம் கிராமத்தில் 4.66 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வனத்துறைக்கு வருவாய்த்துறை கொடுத்தது.
ஆனால், வனத்துறையோ இதுநாள் வரை ராஜீவ்காந்தி நகர் நிலத்தை வரு வாய்த் துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இதனால் பட்டா வழங்கும் பணி தடைபட்டு நிற்கிறது. இது தொடர்பாக துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் உள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி வெள்ளியன்று (மே 26) ராஜீவ்காந்தி நகரை பார்வையிட்டார்.
அப்போது பேசிய நாகை மாலி, இந்த பிரச்சனையை முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, ராஜன்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.