த மிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் அரசு தொழில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, 49 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி ஜனவரி முதல் வாரத்தில் கோலாகலமாக தொடங்கியது. குதூகலம்! சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகாமையில் உள்ள தீவுத் திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியின் பிரதான நுழைவு வாயில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, மாமல்லபுரம் கடற்கரை கோயில், சிற்பங்கள், திருவாரூர் தேர் போன்று தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்து சிறிது தூரம் சென்றதும் பனிக்கட்டி உலகம், கடல் கன்னி, அவதார் உலகம், மென் காட்சியகம், மிரள வைக்கும் பேய் வீடு, 3 டி திரையரங்கம், மேஜிக் ஷோ, அறிவியல் உலகம் என்று ஒரே இடத்தில் அமைந்திருக்கும் ‘திரில்’அரங்குகள் ரசிக்க வைக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும் அனைத்து தரப்பினரையும் குதுகலப்படுத்துகிறது. சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகளான ஜம்பிங், பந்து விளையாட்டு, பெற்றோருடன் சிறுவர்கள் பயணிக்கும் ரயில் என அனைத்தும் வசீகரிக்கிறது. பல மிகப்பெரிய அளவிலான ராட்டினம் முதல் பல விதமான ராட்டினங்கள் உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பெரியவர்களுக்கு பிரமாண்ட ராட்டினம், காற்றில் பறக்கும் கப்பல் என மெய் சிலிர்க்க வைக்கும் பல்வேறு விளையாட்டுகள் இருக்கின்றன. அதேபோல் குழந்தைகளுக்கு தனித்தனி விளையாட்டுக்கள் இருக்கின்றன.
விதவிதமாக...
குழந்தைகள் இளைஞர்கள் மனதை கவரும் விளையாட்டு உபயோகப் பொருட்கள் தொடங்கி ஆடம்பரப் பொருட்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளிகள் எனப் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. ஊட்டி டீ தூள், விதவிதமான சாக்லேட், ஊறுகாய், வளையல்,கம்மல், விதவிதமான கைப்பைகள் என ஆடம்பரப் பொருட்கள், மொபைல் போன்களுக்கான உப பொருட்கள், மலைப் பிரதேசங்களில் விளையும் கடுகு, மிளகு, சீரகம், ஏலக்காய், காய்ந்த திராட்சை முதல் மூலிகை பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்னும் ஆவின் பால்கோவா, ஐஸ் கிரீம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோலா, ஸ்வீட் கர்ன், பஜ்ஜி, ஸ்ப்ரிங் உருளைக் கிழங்கு, பேல் பூரி, பஞ்சு மிட்டாய், , மீன் வறுவல், சிக்கன், நூடுல்ஸ் என உணவு வகைகள், திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நம் கைகளில் பட்டுப் புழு ! பட்டு சேலை இல்லாமல் பரிசமா? திருமணமா? என்பார்கள். அதனால்தான் செழுமையான அழகு மற்றும் ஒப்பிடமுடியாத வடிவங்கள், வண்ணங்களால் உற்பத்தியாகும் இந்திய பட்டு புடவைகள் இல்லாமல் பெரும்பாலான திருமணமும் நிறைவடையாது. இருந்தும், இந்த பட்டு புடவைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உண்டு. இந்த பட்டு புழுவின் வாழ்க்கை சுழற்சி, பட்டு புழு முட்டை, வளர்க்கப்பட்ட புழுக்கள் மற்றும் பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அதுவும் நம் பக்கத்தில் நேரில் பார்க்க முடிகிறது. அரிதிலும் அரிது! அடுத்ததாக, நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது வேளாண் துறை. இந்த துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்குள் புகுந்ததும் இதற்கு முன்பு நாம் கேள்விப் பட்டாலும் பார்க்க முடியாத அரிய வகையான சிறுதானியம், பயறு வகைகள், மணிலா, பாரம்பரிய அரிசி வகைகள் அனைத்தையும் இங்கு பார்க்க முடிகிறது. இது மட்டும் தான் என்று இருக்கிறதா? என்றால், நெல் வகைகளும் வித்தியாசமான பெயர்களையும் தெரிந்துகொள்ளலாம். நெற்கதிர்கள், நெல் மணிகளை காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும், கிழங்கு வகைகள் ஏகப்பட்டதையும் காண முடியும்.
அலைமோதும் இளசுகள் !
உள்ளரங்கம், வெளி அரங்கங்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் மாநிலம் தொடங்கி தேசியம், சர்வதேசம் என்று வெற்றியாளர்கள் யார்? யார்? பதக்கம் வென்றவர்கள், எந்தெந்த மாநிலங்களில் வெற்றி பெற்றார்கள் என்ற ஏராளமான விவரங்களை தாங்கியுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. குட்டி குட்டியா போட்டோ புகைப்படம் காட்சிகளும் உள்ளன. அதுமட்டுல்ல, சதுரங்கம், சிலம்பம் விளையாடிக் காட்டலாம். குத்துச்சண்டை செய்து காட்டலாம் என்பதால் சிறுசுகள் முதல் இளசுகள் வரைக்கும் இந்த அரங்கை முழுமையாக ஆக்கிரமிக்கிறது. நல்வாழ்வும்-நமது கடமையும் ! மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அரங்கில் இதயவலி, மாரடைப்பு ஏற்பட்டால் முதல் உதவி கொடுப்பது எப்படி? என்பதையும் அதன் பிறகு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் என்று அனைத்தையும் பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தத்ருபமாக செய்து காட்டுகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பணியின் போது என்ன செய்கிறார்கள்? தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது, காப்பாற்றுவது எப்படி? என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், என்ன மாதிரியான உபகரணங்கள் பயன்படுத்துகிறார்கள். தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் எத்தனை?. ரப்பர் படகின் பயன்பாடு ஆகியவற்றுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. இன்னும் எத்தனை எத்தனை... இது தவிர பொருட்காட்சியின் உள்ளே, தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோவில்கள், கோபுரங்கள் மாதிரிகள் பாரம்பரியத்துடன் அழகாக வடிவமைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகளை காட்சிக்கு வைத்துள்ளனர். நமது மீனவர்கள். கடலில் எந்த பகுதிக்கு சென்று எங்கு மீன் பிடிப்பது? என்பதுடன் வண்ண வண்ண கலர் மீன், ஜல்லி மீன் என அழகழகாய் காட்சிப்படுத்தியுள்ளனர். துறை வாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுடன் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றிய அரசின் சென்னை துறைமுகம், இந்திய ஆயில் நிறுவனம் என 43 அரங்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட திட்டங்கள், அரசு கொண்டுவந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் போன்ற தகவல்களை காட்சிப்படுத்துகிறது. மேலும் தேவைப்படும் விளக்கமும் கொடுக்கிறார்கள். 110 சிறிய கடைகள், 30 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் மக்கள் மனதை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. - சி.ஸ்ரீராமுலு