70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வன காவலர்கள், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் கண்ணில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் என்.காசிநாதன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் டி.புருஷோத்தமன், மாவட்டச் செயலாளர் கோ.பழனி மற்றும் பலர் உரையாற்றினர். ராணிப்பேட்டையில் முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். சுரேந்திரன் தலைமையில் கண்களில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என். ஜெயக்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ். பச்சையப்பன், மாநிலச் செயலாளர் சி. சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர். வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பா.ரவி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.