வேலூர், அக். 27 - தபால் தந்தி ஊழியர் சங்கத் தலைவர் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு விழா சனிக்கிழமையன்று (அக்.26) வேலூர் பெல்லியப்பா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு ஜி.நரசிம்மன் மற்றும் ஞான சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் பேசுகை யில், “தபால் தந்தி ஊழியர்கள் மட்டுமல்லா மல் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வேலூர் நகர உழைப்பாளி மக்களை ஒன்று திரட்டி போராடியதோடு, இடதுசாரி இயக்க த்தை தோழர் சிஎஸ்பி வளர்த்தார்” என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் எஸ்.தயாநிதி, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ், என்எப்பிஇ தலைவர் எஸ்.ரகுபதி, ஓய்வு பெற்றோர் சங்கங்களின் தலைவர்கள் மாணிக்கமூர்த்தி, மோகன், சிஎஸ்பி மகள் சி.பி.மல்லிகா பத்மினி, மகன் சி.பி.சந்திர சேகரன், பேரன் சி.ஆர்.பாரதி கண்ணன் உள்ளிட்டோர் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சி.எஸ்.பஞ்சாபகேசன் - இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை’ புத்தகத்தின் மறு பதிப்பை ஏ.கே. பத்மநாபன் வெளியிட, ஞான சேகரன் பெற்றுக் கொண்டார். ‘சி.எஸ். பஞ்சாபகேசன் நூற்றாண்டு மலரை ஏ.கே. பத்மநாபனிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் சிஎஸ்பி குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். கதிர் அஹமது நன்றி கூறினார். முன்னதாக ஸ்ரீதரன் வரவேற்றார்.