சென்னை,மார்ச் 5- சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி மேம்பாலம் அருகே ஞாயிறன்று அதிகாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளங்கோவன், மோகன், காவலர் ஜெயக்குமார் ஆகி யோர் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மெரினா நோக்கி மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்தது. இந்த காரை போலீசார் கையை காட்டி நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்ற கார் காவலர் ஜெயக்குமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து உதவி ஆய்வாளர்கள் இருவரும் சத்தம் போட்டுக்கொண்டே ஓடிவந்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. கார் மோதியதில் காவலர் ஜெயக்குமாரின் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. காவலர் மீது மோதிய கார் நீல கலர் ஷிப்டு கார் என்று போலீ சார் தெரிவித்தனர். காரில் இருந்த நபர்கள் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்றும், அதனால்தான் நிற்காமல் காவலரை இடித்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காரில் தப்பிய நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் காரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.