விழுப்புரம், பிப்.9- விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் அடுத்த அழகன்குப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மீன்பிடி துறைமுகம் திட்ட உதவி பொறியாளர் (கடலுார் உபகோட்டம்) முத்தமிழ்ச்செல்வி, மரக்காணம் தாசில்தார் பழனி ஆகி யோருடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரைகுப்பம் பகுதியில் ரூ. 235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு பணி முடிந்துள்ளது. வரைவு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. மேலும், சுற்றுச்சூழல்அனுமதி பெறுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், அழகன்குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.