அம்பத்தூர், நவ. 11- ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய கன்னியம்மன் நகர் வரை, தடம் எண் 61 கே என்ற மாநகர பேருந்து இயக்கப்படு கிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை புதிய கன்னியம்மன் நகரில் இருந்து, ஆவடி பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டினார். நடத்தினராக சீனிவாசன் இருந்தார். பேருந்து ஆவடி எச்.வி.எப். சாலையில் உள்ள பாரத வங்கி அருகே சென்று கொண்டிருக்கும் போது, அதிக பாரம் தாங்காமல் பேருந்தின் பின் பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில், படிக்கட்டில் பயணித்த 2 பள்ளி மாணவர்கள், ஒரு வாலிபர் ஆகிய 3 பேரும் சாலையில் விழுந்தனர். இதில் அந்த 3 பேருக்கும் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. மாநகர பேருந்துகளை முறையாக பராமரிக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என பயணிகள் குற்றம் சாட்டினர். இந்த விபத்து தொடர்பாக ஆவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.