districts

கிணற்றில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலி

வாணியம்பாடி, அக். 30- வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள சுண்ணாம்பு பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் தனுஷ் (19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.  மகனின் படிப்புக்காக வேலு தனது குடும்பத்தினருடன் சென்னை வடபழனிக்கு குடி பெயர்ந்தார். அங்கு இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முனிசாமி. இவரது மகன் ராகுல் (20). இவர் கல்லூரியில் பி.காம். 3ஆவது ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். தனுஷின் பாட்டி நாகம்மாள் சுண்ணாம்புபள்ளம் கிராமத்திலேயே வசித்து வருகிறார். தீபாவளி கொண்டாடுவதற்காக ராகுலை தனுஷ் தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். இருவரும் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். சனிக்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக இருவரும் சென்றுள்ளனர். அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புதுறையினர் வந்து கிணற்றில் இருந்து தனுஷ், ராகுலை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்காயம் காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.