districts

கஞ்சா வேட்டையில் 1,610 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, டிச. 31- தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கஞ்சா வேட்டை 1.0, கஞ்சா வேட்டை 2.0 நடந்து முடிந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றது. கடந்த 19 நாட்களில் 1,811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கோடியே 847  லட்சத்து 1085 ரூபாய் மதிப்புள்ள சுமார்  1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. இவர்கள் பயன்படுத்திய 153 வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டன. இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 8 லட்சத்து 83 ஆயிரத்து 934 ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக, 282 காவல் நிலைய எல்லை களில் பெரும்பாலும் போதைப் பொருட்களின் விற்பனை அறவே தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போதைப் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் வழியாக வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு  டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.