சிவகங்கை, ஜூன் 16- சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அரணையூரில் 27 ஆண்டு களாக இயங்காத அரசுப் பள்ளி செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து அரணையூர் ஊராட்சி தலைவி முனீஸ்வரி கணேசன் கூறுகை யில், அரணையூரில் செயல்பட்டு வந்த ஆரம்பப் பள்ளி கடந்த 27 வருட காலமாக எண்ணிக்கை குறைபாடு காரணமாகவே செயல்படவில்லை.ஊராட்சி மன்ற தலைவி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பள்ளிக் கூடத்தை மீண்டும் திறக்க முயற்சி எடுத்துக் கொண்டோம்.கிராம மக்கள் ஒன்று பட்டு செயல்பட்டோம்.ஊரக வளர்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக் குமார், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் முயற்சி யால் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டது என்றார். இப்பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவி முனிஸ்வரி கணேசன் தலைமை வகித்தார். மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன்,மாவட்ட கல்வி அதிகாரி முத்து சாமி, திமுக ஒன்றிய செயலாளர் தமிழ் மாறன், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஊர்காவலன்,கல்வி அதிகாரி சார்லஸ்,வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, விஏஒ முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.