சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், உள்ளாட்சிகளை தரம் உயர்த்திட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வீர் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வியாழனன்று மாலை நிறைவடைந்தது. இத்தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பலமான கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுகிறது.
இதனையொட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக வியாழனன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் கோவை மாநகராட்சி மற்றும் அன்னூர், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.
முன்னதாக மேட்டுபாளையம் நகராட்சி, அன்னூர் பேரூராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக சட்டமன்றத்தில் வீணாய்போன பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளின் ஏகமனதான ஒப்புதலோடு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என தீர்மானம் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது வரலாற்றில் இதுதான் முதல் முறை.
பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த காலத்தில் அதிமுகவுக்கு வராத புத்தி தற்போது வந்திருப்பது மகிழ்ச்சிதான். பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டிய இயக்கம் என்பதை தமிழக மக்கள் ஏற்கனவே புரிந்து புரிந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது வட இந்திய மாநிலங்களிலும் பாஜகவை அம்மக்கள் விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றியிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்டதோடு, கொரோன நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என மக்களின் நிலை அறிந்து ஆட்சி நடத்துகிறார்.
தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை நோக்கி தமிழக முதலமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஊழல் ஊறித்திளைத்து கொண்டிருக்கிற உள்ளாட்சியை நல்லாட்சியாக மற்ற வேண்டும் என்பதற்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தல் களத்தை சந்திக்கிறது. உள்ளாட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளில் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்த மாநில அரசின் நிதி தேவைப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மக்களுக்கு தேவையானதை செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். நமது உள்ளாட்சிகளை தரம் உயர்த்திட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி
பெறச்செய்யுங்கள்.என அவர் பேசினார்