மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக்காட்டு கணவாய் வழியாக வரும் காற்று இதமாக, ஈரப்பதமாக இருப்பதால் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவடங்களில் வருடம் முழுமையும் வெண்பட்டு உற்பத்தி செய்யத் தகுத்த சூழல் உள்ளது. எனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு, உலக தரத்தில் பட்டு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
பட்டு உற்பத்தி வரலாறு
மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் காடுகளில் இருந்த பாமர மனிதர்களின் மூலம் பட்டுக் கூடு வந்ததாகவும், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றியதாக ஆய்வுகள் கூறுகிறது. பின்னர் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்புதான் பட்டு உற்பத்தி உலக நாடுகள் முழுவதும் பரவியது. இந்தியாவில் கர்நாடாக மாநிலத்தில் மைசூர் ராஜாவுக்கு பட்டினால் ஆன ஆடைகள் வந்தாக வரலாறு. அதன் பின்னரே இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டு விவசாயம் பரவியதாக கருதப்படுகிறது.
வெண்பட்டு
முதலில் உலகம் முழுவதும் மஞ்சள் பட்டுக் கூடுகளினால் ஆன ஆடைகள் பயன்பாட்டில் இருந்தது. பின்னாளில் ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் மூலம் புதிய தொழிற்நுட்பத்துடன் வெண் பட்டுக் கூடுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் குடியிருக்கும் வீடுகளில் வட்ட தட்டுக்களில் புழுக்களை வளர்த்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டது. நாளடைவில் பட்டுக் கூடு வளர்ப்பானது, விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. பட்டுக்கூடுகள் அதிக அளவில் உற்பத்தி செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின் பட்டுவளர்ச்சித் துறை உருவாக்கப்பட்டது.
உயரிய தொழில்நுட்பம்
சமீப காலத்தில் உயரிய தொழில் நுட்பத்துடன் வேலை பளுவை குறைத்து வெண்பட்டு புழுக்கள் சதுர வடிவ தட்டிகள் (ரேக் ஸ்டம்) மூலம் தனி மனை அமைத்து விரிவுபடுத்தப்பட்டது. பின்பு முட்டை பொறிப்பு, புழு வளர்ப்பு ஆகியவை விவசாயிகளால் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த கால நிலை குறைக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இளம் புழு வளர்ப்பு மையங்கள் மூலம் புழுக்கள் பெறப்பட்டு பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பட்டுக்கூடுகளிலிருந்து நூலிழை தயாரிக்கப்பட்டு இந்த சமூகத்தில் ஆடை அலங்காரமாகவும், மருத்துவத் துறை சார்ந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பட்டு ஏற்றுமதியின் மூலம் மிகப் பெரிய அளவில் அன்னிய செலாவணி வருமானம் கிடைக்கிறது. இப்படி பட்டு உற்பத்தி தொழில் விவசாயத்தின் ஒரு பகுதியாக உள்ளதால் நம் விவசாயிகள் உலக தரத்தில் பட்டு உற்பத்தியை கொண்டு செல்ல பல புதிய தொழில் நுட்பங்களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.