districts

img

ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரம்: நிதியமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரத்தில்,ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் சிவானந்தா காலனி பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம்  பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து அன்னபூர்ணா சீனிவாசன் ஒன்றிய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ காட்சிகள் பா.ஜ.கவினரால் வெளியிடப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமான ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி சிவானந்தா காலனியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் , தபெதிக பொது செயலாளர் கு.ராதாகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் சிபிஐ, வி.சி உட்பட இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பன் மாலை அணிந்தும், கிரீம் பன்னை கையில் ஏந்தியபடியும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.