districts

img

நிற்காமல் சென்ற பேருந்து சிறைப்பிடிப்பு

நாமக்கல், ஜூலை 3- பேருந்துக்காக பயணிகள் காத்திருந்த நிலையில், நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ளது எஸ்பிபி காலனி பேருந்து நிறுத்தம், ஈரோடு நாமக்கல்லை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த பகுதி உள்ளது. தினம்தோறும் நாமக்கல்லிற்கும், ஈரோட்டிற்கும், ஏராளமானோர் பணிகளுக்காகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும், மாணவ மாணவியர் அதிகளவு பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் செல்லும் தனியார் பேருந்துகள் எஸ்பிபி காலனி பேருந்து நிறுத்த பகுதியில் நின்று செல்வதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. அவ்வப்போது இதுகுறித்து உள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கும், பள்ளிபாளையம்  போலீசாருக்கும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து நிற்காத நிலையில், இரண்டுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை எஸ்பிபி காலனி பகுதியில் சிறை பிடித்தனர்.  இதனையடுத்து, அங்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேருந்துகளை முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என பள்ளிபாளையம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.