கோவை, ஜுன் 2- தனியார் பள்ளி ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை நகர பகுதியை சேர்ந்த 37 வயது பெண் பெற்றோருடன் வசிக்கிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடன் பள்ளியில் பணியாற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் மூலமாக வடவள்ளியை சேர்ந்த 42 வயது தொழில் அதிபருடன் இந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகி வந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை தெரிந்துகொண்ட தொழில் அதிபர், மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார். இந்நிலையில், மருதமலை சாலையில் உள்ள வீட்டிற்கு அந்த ஆசிரியை அழைத்து சென்றார். அங்கு திருமணம் செய்வதாக உறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் பல்வேறு காலகட்டங்களில் இவரிடமிருந்து ரூ.25 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டார். தற்போது அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து இவர் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இவர், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொழில் அதிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.