districts

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம், மே 22-காஞ்சிபுரம் அருகே ஏசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் தீக்கிரையாகின. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தில் மெடாக் நோ இந்தியா என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு குளிர்சாதனப் பெட்டி உதிரிபாகங்கள், தெர்மகோல், ஸ்பாஞ்ச் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அருகே பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, கிடங்கில் இருந்த பொருட்கள் முழுவதையும் ஆக்கிரமித்து, கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வானுயர கரும்புகை எழுந்து கருமேகங்கள் திரண்டது போல் காட்சியளித்தன. தகவலறிந்து நிகழ்விடம் சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் மூன்றரை மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் தீக்கிரையாகின. இந்த விபத்து நேர்ந்த கிடங்கின் அருகே தொழிற்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெல்டிங் பணி நடைபெற்றபோது, தீப்பொறி தெறித்து கிடங்கில் தீ விபத்து நேர்ந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.