உதகை, ஆக.28- எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி உதகையில் புதனன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில், உலக இளைஞர் தினத்தை ஒட்டி, எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி உதகை ரயில் நிலையத்தில் துவங்கியது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். இப்பேரணி, மார்க்கெட், மணிகூண்டு, ஏடிசி வழியாக சென்று சாந்தி விஜய் பள்ளியில் நிறைவடைந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர், கையில் பதாகைகள் ஏந்தியப்படி பேரணியில் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சார்பில் எச்.ஐ.வி, பால்வினை நோய் குறித்து ஆலோசனை வழங்கி, பரிசோதனை செய்யக்கூடிய நடமாடும் வாகன இயக்கத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார். உதகை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, இருப்பிட மருத்துவர் ரவிசங்கர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக திட்ட மேலாளர் அறிவழகன், மருத்தவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதைபோல், எச்.ஐ.வி., – எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உதகை, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட நான்கு வட்டாரத்தில் உள்ள ஆட்டோக்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில், 10 கிராம ஊராட்சியினை தேர்வு செய்து கிராம ஊராட்சிகளிடையே கருத்தரங்கம், ஆட்டோ உரிமையாளர்களிடம் கருத்தரங்கம் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.