உதகை.பிப்.1- துணை வட்டாட்சியரை தாக்கிய போலீசாரை கைது செய்யக்கோரி, வருவாய்த் துறையினர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை வட்டாட்சியர் பாபு (33). இவருடன் பெண் போலீசார் வாகனச் சோதனையில் இருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின்பேரில் உதகை அனைத்து மகளிர் காவல் துறையினர் வட்டாட்சியர் பாபுவை கைது செய்தனர். இதன்பின் அவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பணியில் இருந்த துணை வட்டாட்சியரை தாக்கிய போலீசார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் வருவாய்துறை பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.