கோவை, ஜன.5- அடிப்படை வசதிகளின்றி புதர் மண்டிக்கிடக்கும் மாநகராட்சி சுடுகாட்டை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 56 மற்றும் 57 ஆவது வார்டுகளுக்கான வண்டிபுதூர் பட்டணம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சுடுகாடு புதர்மண்டி காணப்படுகிறது. இந்த சுடுகாட்டை பராமரிக்க பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ச்சியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், இந்த சுடுகாட்டில் பணியாளர் இல்லை, தண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது அங்கு வரும் உறவினர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. பலமுறை மனு அளித்தும எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக கோவை மாநகராட்சி பணியாளர்களை அமர்த்தி, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, பராமரிக்க வேண்டும், என்றனர்.