திருச்சிராப்பள்ளி, மே 11-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் லெனின், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்துள்ளதை பாராட்டுகிறோம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திட அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை நவீன காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திட வேண்டும்.மாணவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறைகள், வகுப்பறைகள் மேலும் மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசு பள்ளிகளை மாணவர்கள் எண்ணிக்கையில்லை என்பதை காரணம் காட்டி மூடும் முடிவுகளை கைவிட வேண்டும் உள்ளிட்டவை அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பாரதி சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் இரட்டைமலை, ஷாஜகான், விக்கி, அகிதா, செந்தில், விஜயேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.