districts

மணல் கொள்ளையை தடுப்பதற்கு நதிக்கரைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பதை விரைந்து தொடங்கிடுக!

சென்னை,ஏப்.26-மணல் கொள்ளையைத் தடுப்ப தற்கு, தமிழகம் முழுவதும் உள்ள நதிக் கரைகளில் ஆளில்லா விமா னங்கள் மூலம் கண்காணிக்கும் நடைமுறையை விரைந்து தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், விண்ணமங்கலம், மொட்டூர், கங்காபுரம் கிராமங்களில், செய்யாறு நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல்காரர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், மணல் கொள்ளையைத் தடுக்கமாவட்ட மற்றும் தாலுகா அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 783 வாகனங்கள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தலில் ஈடுபட்டவர்களிடமிருந்து, 2.15 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அமர்வு, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அரசு அறிக்கை அளித்துள்ள போதும், அதில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது, எவ்வளவு மணல் பறிமுதல் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்கள் இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். மாவட்ட, தாலுகா குழுக்கள், ஏசி அறையில் ஆலோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை. களத்துக்குச் சென்று கடத்தலை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.மேலும் கூறுகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும்,மணல் கடத்தலைத் தடுக்க முடியாதநிலைக்கு அதிகாரிகள் மட்டத்தில் சில கறுப்பு ஆடுகள் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. நேர்மை யான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வந்தாலும், அவர்கள்மீது கொலை முயற்சி, அரசியல் செல்வாக்குகள் பயன்படுத்தப்படுவ தால் அவர்களும் நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதாகக் குறிப்பிட்டனர்.மணல் கொள்ளையைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிக்கரைகளிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாவட்ட மற்றும் தாலுகா அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் உயரதிகாரிகளை இணைக்கவும் அறிவுறுத்தினர். மேலும், மணல் கடத்தலைத் தடுக்க நியமிக்கப்பட்டுள்ள அதி காரிகள், கடமை தவறினால் அவர் களை சஸ்பென்ட் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;