புதுகை சிறையில் ஆய்வு
புதுக்கோட்டை, மே 11- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது மாவட்ட சிறைச்சாலை. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், செல்போன்கள் உள்ளதாக காவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான காவலர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். கைதிகள் அறை, கழிப்பறை, குளிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.
அரிய வகை கடல் மண்புழு மீட்பு
புதுக்கோட்டை, மே 11-புதுக்கோட்டை மாவட்டம் திருப்பனவாசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாதி கிராமத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் மண்புழு எடுப்பதாக காவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனையில் ஒரு வாகனத்தில் 10 கிலோ அளவிலான கடல் மண்புழு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 10 கிலோ மண்புழுவையும் மீட்டு அறந்தாங்கி வனத்துறை அதிகாரி அஹமது வசம் காவலர்கள் ஒப்படைத்தனர்.
புத்தூர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சீர்காழி, மே 11- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை வகுப்புக்கான 2019-20 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கு 15-ம் தேதி அன்றும், அறிவியல் பிரிவுக்கு 16-ம் தேதி, வணிகவியல் பிரிவுக்கு 20-ம் தேதி, தமிழ் மற்றும் ஆங்கில பிரிவுக்கு 21-ம் தேதி காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் லெட்சுமி தெரிவித்துள்ளார்.
வீட்டில் 37 பவுன் கொள்ளை
சீர்காழி, மே 11- நாகை மாவட்டம் கொள்ளிடம் கே.ஏ.பி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல்(60), ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய செயற்பொறியாளர். இவர் சம்பவத்தன்று சென்னை சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகை மற்றும் 1.85 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனராம். இது குறித்த புகாரில் கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.