தருமபுரி, நவ.17- மணியம்பாடி காலனியில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாய கூடத்தை அகற்றிவிட்டு புதிய சமுதாய கூடம் கட்டி தரவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மணியம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மணியம்பாடி காலனி யில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சமுதாய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கட்டிடம் பழுதடைந்த உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப் பகுதி பொதுமக்கள் உள்ளனர். மணியம் பாடி காலனியில் திருமண உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு சமுதாய கூடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இடிந்த சமுதாய கூடத்தை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்த சமுதாய கூட கட்டிடத்தை அகற்றி புதிய சமுதாய கூடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.