ஈரோடு, மார்ச் 20- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக மகளிர்க்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கேரம், சதுரங்கம், இறகுப்பந்து, மேஜைப்பந்து, இவளைப்பந்து மற்றும் எறிபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீராங்கனைக்களுக்கான இறுதிப் போட்டிகள் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கேரம் போட்டியில் ஈரோடு மண்டலம் முதலிடமும், திருச்சி மண்டலம் இரண்டாமிடமும், வளைப்பந்தில் கோவை மண்டலம் முதலிடமும், ஈரோடு மண்டலம் இரண்டாமிடமும், சதுரங்கத்தில் ஈரோடு முதலிடம், திருநெல்வேலி இரண்டாமிடம், இறகுப்பந்தில் சென்னை முதலிடம், கோவை இரண்டாமிடம், எறிபந்து கோவை முதலிடம், திருச்சி இரண்டாமிடம், மேஜைபந்து விழுப்புரம் முதலிடம், கோவை இரண்டாமிடம் பெற்றது. இதில் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா மஹாராஜா கலை அரங்கத்தில் நடைபெற்றது. ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் கு.இந்திராணி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாநகராட்சி மேயர் எஸ்.நாகரத்தினம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மா.சிவலிங்கராஜன், செயலர் மணிக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.