அவிநாசி, ஜன.3- அவிநாசி அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் முறைப்படுத்தி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரை பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தார் முறைப்படுத்தாத வீட்டுமனையில் குடியிருந்து வந்துள்ளனர். இதனால், மின்சாரம் முதல் குடிநீர் வசதி எதுவும் கிடைக்காமல் அவதியடைந்தனர். இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சி.முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.சத்தியபாமா அவனாசியப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையினருக்கும் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர், இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முறையான பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுத்தனர். பெரும் முயற்சி மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் நிர்வாகிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.