கோவை, ஜன.22- உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கட்டப்பட்ட நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக சனியன்று திறந்து வைத்தார். கோவை தெற்கு மண்டலம், கரும்புக்கடை, 86 வார்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது, உக்கடம் கெம்பட்டி காலனியில் இருந்து சுமார் 300 குடும்பங்கள் இங்கு மறு குடி அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களின் அவசர தேவைக்காக பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பணிகள் துவங்கியது. இதன் கட்டிட பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. எனவே, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக சனியன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதில், புல்லுக்காடு பகுதியில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதர நிலையமும் திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.