கவுகாத்தி, ஆக.30- அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வங்காளதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரைவு பட்டியலில் சுமார் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இறுதிபட்டியல் சனிக்கிழமையன்று வெளியிடப்படுகிறது. வரைவு பட்டியலில் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். ஆனால் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது பற்றி எந்த தகவலும் தெரியாமல் உள்ளதால் அசாம் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. ஆன்லைனில் காலை 10 மணிக்கு பட்டியல் வெளியாகும் எனத்தெரிகிறது.