districts

img

100 சரவன் தங்க நகைகளுடன் மாயமான தம்பதி கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நகைப்பட்டறையில் இருந்து  100 சவரன் தங்க நகைகளுடன் மாயமான தம்பதியைத் தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (45), இவரது மனைவி உமா மகேஸ்வரி. இருவரும் கோவை வடமதுரை பகுதியில் தங்கியிருந்தனர். மேலும்  பாண்டியராஜன் ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் உள்ள பழனிக்குமார் என்பவருக்குச் சொந்தமான நகை பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேறு நகைப் பட்டறையில் நகை செய்வதற்காக பாண்டியராஜனிடம் தங்கக் கட்டிகள் வழங்கப்பட்டிருந்தது.  அதன் மூலம் 100 சரவன் நகைகள் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியிலிருந்து பாண்டியராஜன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மனைவி உமா மகேஸ்வரியோடு தலைமறைவானார்.  இதையடுத்து நகை பட்டறை உரிமையாளர் பழனிகுமார் ஆர் எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார்.  புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்,  தனிப்படை அமைத்து தம்பதியினரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் பதுங்கி இருந்த தம்பதியைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் திருடிய நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர், பின்னர் இருவரையும் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்