districts

img

பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு - கோவைவில் பரபரப்பு

கோவை பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான கடை மற்றும் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவம் கோவையில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. 

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரேடு உள்ளிட்ட மாவட்டங்களில் மதரீதியான மோதலை உருவாக்கும் விதத்தில் மதவெறி அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் இந்து முன்னணி கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய பாஜக கோவை மாவட்டச் செயலாளர் பாலாஜி உத்தமராமசாமி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கோவை கரும்புக்கடை பகுதியில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகளில் தேசியப் பாதுகாப்பு முகமை சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருவர் பைக்கில் சென்றவாறு பெட்ரோல் குண்டை வீசிச்சென்றனர். நல்வாய்ப்பாக அந்த குண்டு வெடிக்கவில்லை. அதேபோல் கோவை ஒப்பணக்கார வீதியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான மாருதி செலக்சன் என்கிற துணிக்கடை மீதும்  மண்ணெண்ணெய் திரியுடன் பாட்டிலை இருவர் வீசிச்சென்றனர். இன்று ( வெள்ளியன்று ) அதிகாலை பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகளின் கார் உள்ளிட்ட கண்ணாடியை உடைத்தும், டீசல் ஊற்றியும் எரிக்க முயற்சி நடைபெற்றிருக்கிறது. 

இதே போன்று குனியமுத்தூர் இந்து‌முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகு அவர்களின் கார் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் பாஜகவை சேர்ந்த மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருக்கின்றனர். இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. 

இதையொட்டி கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மதவெறி அமைப்புகள் எப்படியாவது வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் இந்த சூழலில் பொதுமக்கள் ஆத்திரமூட்டலுக்கு இறையாகாமல் வன்முறையை தூண்டுபவர்களை தனிமைப்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு சம்பவத்திற்கும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

;