கோவை, பிப்.5- கோவை மாவட்டத்தின் 183 ஆவது ஆட்சியராக கிராந்திகுமார் பாடி ஞாயிறன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சிய ராக கிராந்திகுமார் பாடி ஞாயிறன்று பொறுப்பேற்று, கோப்புகளில் கையெழுத்திட்டார். அவரிடம் ஏற்கனவே பணியிலிருந்து ஜி.எஸ்.சமீரன் கோப்புகளை ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து கிராந்தி குமார் பாடிக்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் கிராந்திகுமார் பாடி கூறுகையில், நான் 2015 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் பேட்ஜ். நான் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பணி புரிந்துள்ளேன். இன்று (ஞாயிறன்று) கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொள்கிறேன். அரசின் திட்டங்கள் மற்றும் பயன்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களின் குறைகளை தீர்க்கவும் அனைத்து துறைகளில் ஒருங்கிணைந்து அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் அனைத்து துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்த அறிவுரை தெரிவித்துள்ளார், என்றார்.