நீலகிரி, மார்ச் 8- கொடநாடு கொலை, கொள்ளை வழக் கில் கூடுதல் சாட்சிகள் இடையே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் இறந்த கனகராஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை யானது நீதிபதி அப்துல் காதர் முன்னிலை யில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. இதில், சிபிசிஐடி போலீசார் கூடுதல் சாட்சி களிடையே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால், அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் காதர், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டார்.