உதகை, பிப்.28- நீலகிரி மாவட்டத்தில் உறைபனிப்பொழிவு காலம் நிறைவடைய உள்ள நிலையில், விவசாய பணிக்காக உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இங்கு விளைக்கப்படும் பொருட்கள் உதகை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நிலவி வரும் உறைபனி பொழிவால் காய்கறி விவசாயம் சற்று தொய்வடைந்திருந்தது.தற்போது பனிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், உதகை அருகேயுள்ள முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கல்லத்தொரை, ஆடா, கேத்திபாலாடா, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை டிராக்டர்கள் மூலம் உழுது, விதைப்பு பணிகைள் மேற்கொண்டு வருகின்றனர். பனிக்காலம் நிறைவடைந்த உடன் விதைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். மேலும், இனி வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால் காய்கறிகளுக்கு நீர் பாய்ச்ச வசதியாக நிலங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பயிரிட்டுள்ள காய்கறி பயிர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நீர் பாய்ச்சும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.