கோவை, ஏப். 20- கோவையில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட 1192 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலையொட்டி கடந்த ஏப்.17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் சில்லறை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனையில் ஈடுபடுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீசார், மதுவிலக்கு பிரிவு போலீசார் கோவை மாநகரில் வெள்ளியன்று பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். வடவள்ளி வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ. 250 முதல் 300 வரை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பார் சப்ளையர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜா (28), மருதுபாண்டி (27), விருது நகரை சேர்ந்த தமிழ்செல்வன் (27), புதுக்கோட்டையை சேர்ந்த செபாஸ்டியன் (42), கிருஷ்ணன் (41), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 844 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மது விலக்கு பிரிவு போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ்வரன் (31), வீரசேகரன் (42), அன்புகுமார் (44), மகாலிங்கம் (27), கடலூரை சேர்ந்த சுகுமார் (29), கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்த அன்புதுரை (32), ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 348 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசார் 11 பேரை கைது செய்து 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.