தருமபுரி, பிப்.28- ஜக்கசமுத்திரம் கிராமத்தில் 227 பயனாளிகளுக்கு ரூ.78.89 இலட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜக்கச முத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. புதனன்று நடைபெற்ற இம்முகாமில் மொத்தம் 227 பயனாளிகளுக்கு ரூ. 78.89 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இம்முகாமில், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கௌரவ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.