மதுரை, பிப்.28- மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர். இவர்கள் மதுரையில் கிரானைட் மற்றும் உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் தனது நிலத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய கோபாலகிருஷ்ணனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மதுரை மாவட்ட அத்லட்டிக் அசோசியேசன் செயலாளர் உஸ்மான் அலி, பொருளாளர் செந்தில் ராஜன் மற்றும் சீனிவாசன், பி.பாலுசாமி, ஆர்.சுடலைமுத்து, எஸ்.ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.