districts

img

காவிரி ஆற்றில் கழிவுகள் - சரக்கு ஆட்டோ பறிமுதல்

பள்ளிபாளையம், ஜூன் 14 - காவிரி ஆற்றில் கழிவுகள் கொட்டிய சரக்கு ஆட்டோவை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சரக்கு ஆட்டோவில் வந்த சில நபர்கள், ஆற்றில் கழிவுகளை கொட்டினர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.  சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வேகமாக பரவியது.  இந்நிலையில், காவிரி ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டிய நபர்கள் குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பட்லூர் கிராமம், ஓ.ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனம் என்பதும், கோழி தீவன கழிவுகள் காவிரி ஆற்றில் கொட்டப்பட்டது எனவும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. காவிரி ஆற்றை மாசுபடுத்தும் வகையில் கோழிக்கழிவு, குப்பை கழிவு உள்ளிட்ட இதர கழிவுகளை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இந்நிலையில், கோழி தீவன கழிவுகளை காவிரி ஆற்றில் கொட்டிய நபர்களை வைத்தே, காவிரி ஆற்றை மாசுபடுத்தக் கூடாது என்பதை குறிப்பிடும் வகையில் விளம்பர பேனர் கட்டப்பட்டது.